ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக விலையேற்றப்பட்டுள்ளது சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630-இல் இருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340இல் இருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்க வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில், புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் ரூ. 515இல் இருந்து ரூ.535 ஆகவும், ஜூலை மாதம் ரூ.535இல் இருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் முன்பாக கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், ஜூலை மாதம் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.