கடந்த வாரம் முதலே தக்காளி விலை சதமடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி, மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 3 மடங்கு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்வால் ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு, மளிகைப் பொருட்களின் விலையும் திடீரென உயரத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தமிழகம் தொழில் நகரமாக மாறி வரும் அதே வேளையில் உணவு பொருட்களுக்கு அண்டை மாநிலங்களையே சார்ந்துள்ளோம். தமிழ்நாட்டில் விளைச்சல் நிலங்களும், விவசாயிகளும் குறைந்து வருவதால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிமாநிலங்களில் மழை மற்றும் விளைச்சல் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் துவரம் பருப்பு கடந்த வாரம் வரை கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.140 வரை அதிகரித்துள்ளது.
மளிகை பொருட்களை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படும். உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பெருமளவு உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டதால் மற்ற மாநிலங்களுக்கு வரக்கூடிய வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துவரம் பருப்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உட்பட பல மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வாகனங்கள், வேலையாட்கள் கூலி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வெளிச்சந்தையில் மளிகை பொருட்கள் விலை அதிகபட்சமாக 15 விழுக்காடு வரை கூடுதலாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.