தமிழ்நாட்டில் இன்று பதிவுத்துறைக்கான சேவைக் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதால், வீடுகள், மனைகளின் விலையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, பதிவுத்துறை சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “ரசீது ஆவணத்திற்கான பதிவுக்கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.10 ஆயிரம் என்று இருந்தது. இந்தக் கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் அமலுக்கு வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பதிவுத் துறை சேவைக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் மனைகள், வீடுகளின் கட்டணம் சதுர அடிக்கு பன்மடங்கு உயரும் என்று கட்டிடத் துறையினர் தெரிவித்துள்ளனர்.