நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் ‘பாரத் அரிசியை’ மத்திய அரசு விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் இந்த வேகத்தில் வளரவில்லை. குறைவான ஊதியம், நாளுக்கு நாள் குறைந்து வரும் வேலைவாய்ப்பு, நிரந்தரமில்லாத வேலைகள் போன்றவற்றால், சாமானிய மக்கள் இந்த விலைவாசி உயர்வை ஈடுகட்ட முடியவில்லை. எனவே, மக்களுக்காக மத்திய அரசு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
ஏற்கனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் டால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியளவில் அரிசியின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த காரணத்தால் ‘பாரத் அரிசி’யை மத்திய அரசு விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது. கிலோ ரூ.29-க்கு 5 மற்றும் 10 கிலோ மூட்டையில் அரிசி விற்கப்படும். அடுத்த வாரம் முதல் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அரிசியை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.