கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
ஊட்டி நகர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அங்கு சிறப்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனை தொடங்கி வைத்தார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கொரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ச்சியாக பல அலைகள் மூலம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 7 மாதங்களாக உலக அளவில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவிலும் மீண்டும் ஒமிக்ரான மாறுபாடு காரணமாக, பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 50க்கும் கீழே இருந்த தொற்றின் எண்ணிக்கை, தற்பொழுது அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் 300 முதல் 700 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 139 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது..
அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார அரசு மருத்துவமனைகளில் 11,333 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. உள்நோயாளிகள், புறநோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என மருத்துவமனைகளில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, மருந்து மாத்திரை வசதி ஆகியவை மிகப்பெரிய அளவில் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் எந்த பதற்றமும் அடைய வேண்டாம். தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்..