தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக காலி பாட்டில் வாங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கண்மூடித்தனமாக கொட்டுவது மற்றும் காலி பாட்டில்களை உடைப்பது போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், காலி பாட்டில் வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் தெற்கு டாஸ்மாக் மாவட்டத்தில் 95% பாட்டில்கள் வாங்கப்பட்டு உள்ளன. கோவை வடக்கில் 94% பாட்டில்கள் வாங்கப்பட்டு உள்ளன. பெரம்பலூரில் அதிகபட்சமாக – 99% பாட்டில்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் ஜூன் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட 5.83 கோடி பாட்டில்களில் 5.52 கோடி பாட்டில்கள் வாடிக்கையாளர்களால் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளன.
நீலகிரி , சேலம், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 96.2% பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.35 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு சேமித்துள்ளது. தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் தமிழ்நாடு முழுக்க இதை விரிவுபடுத்த உள்ளனர். 4,829 சில்லறை விற்பனை நிலையங்களில், 4,397 கடைகளில் திரும்ப வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறைகள் டாஸ்மாக் கடைகளில் ஏற்படுத்தப்பட உள்ளன. முன்னதாக மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளில் ஒன்று.
அதன்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று சட்டசபையில் கூறியிருந்தார். முதற்கட்டமாக 500 மதுபான கடைகளை குறைப்போம் என்று அவர் அறிவித்திருந்தார். அதன்படி, மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளைக் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த கடைகள் தமிழ்நாடு முழுக்க மூடப்பட்டன. இந்த கடைகளை மூடுவதற்கு முன் அதற்காக லிஸ்ட் எடுக்கப்பட்டது. அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகள் லிஸ்ட் எடுக்கப்பட்டது. இந்த கடைகளை கண்டறியும் பணி நடத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வரும் டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்தனர். பள்ளிகளுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக், கோவில்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் என்று பல்வேறு டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டன. அந்த லிஸ்ட் உறுதியான நிலையில், அது முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டது. இதை உறுதி செய்த பின் சமீபத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் 500 மூடப்பட்டன. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. கண்ணாடி பாட்டில்களை விட டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்றால் செலவு குறைவு என்பதால், அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கர்நாடகாவில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது.