டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்தியது. டாஸ்மார்க் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்தும் சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகியதை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், டாஸ்மாக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடரலாம். ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதா என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ’ஏ’ கட்சி ஆட்சிக்கு வந்து ’பி’ கட்சி மீது நடவடிக்கை எடுக்கும். ’பி’ கட்சி ஆட்சிக்கு வந்து ’ஏ’ கட்சி மீது நடவடிக்கை எடுக்கும்; இதையெல்லாம் உயர்நீதிமன்றம் பார்க்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.