கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (62). இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது தாயாருடன் குடும்பமாக வீட்டில் வசித்து வந்ததோடு வீடு வீடாக சென்று கிறஸ்தவ மத போதனைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தாயார் இறந்த நிலையில், தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகநூல் வழியாக திபோராவிடம் அடிக்கடி மத போதனையில் ஈடுபட்ட கிறிஸ்டோபர், ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இந்தோனேசிய இளம்பெண் திபோராவை நாகர்கோவில் அழைத்து வந்த கிறிஸ்டோபர், அங்குள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வயது கடந்த இந்த திருமணத்திற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு கிறிஸ்டோபர், மனைவி திபோராவுக்கு உணவு வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, அவரது உறவினர்கள் திபோராவை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற கிறிஸ்டோபர் வீட்டிற்கு உள்ளே வரமுடியாத அளவில் கதவுகளை பூட்டி வைத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த கிறிஸ்டோபர், காவல்துறையினரை தொடர்பு கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிறிஸ்டோபரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் இந்தோனேசிய இளம்பெண் திபோராவை வெளியே விட மறுத்ததோடு கிறிஸ்டோபரையும் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் உடன்பாடு எட்டப்படாததால் ஒரு கட்டத்தில் போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்த நிலையில், கிறிஸ்டோபரின் சகோதரர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். இதனையடுத்து போலீசார் கிறிஸ்டோபரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு இரு தரப்பினரும் விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகும் படி கூறிவிட்டு, பாதுகாப்பிற்காக சில போலீசாரை அங்கு நிறுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.