பீகார் மாநிலத்தில் ரவுடிகள் போலியாக போலீஸ் நிலையம் அமைத்து அதை 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பாங்கா நகரில் ஒரு ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலில் இருப்பவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பணம் பறிப்பு உள்ளிட்ட வேலைகளை செய்துவருகின்றனர்.
இந்தஇந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள், போலியாக காவல் நிலையம் நடத்தியதுடன் மக்களிடம் இருந்து பணம் பறித்து உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஓட்டலை தேர்ந்தெடுத்த 6 ரவுடிகள் அங்குள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து போலீஸ் நிலையமாக மாற்றியுள்ளனர். அந்த 6 பேரில் 2 பெண்களும் அடக்கம். காவலர், தலைமைக் காவலர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர் என்ற தகுதி வாரியாக உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளை உறைக்குள் வைத்துக் கொண்டனர். பார்ப்பவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராத வகையில் அவர்கள் தன்னை நிஜ காவல்துறையினராகவே மாறியுள்ளனர்.
காவல் நிலையம் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அப்பகுதி மக்கள் புகார் கொடுக்க அங்கு வர தொடங்கியுள்ளனர். வரும் மக்களிடம் இருந்து அவர்களிடம் உள்ள புகாரை பொறுத்து ரவுடி காவலர்கள் பணம் பறிக்க தொடங்கினர். மேலும், அப்பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து மாமூல் வேட்டை நடத்தியுள்ளனர். இதனால் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்துள்ளது. 8 மாதங்கள் கழிந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த போலி காவலர் ஒருவரை பிடித்துள்ளார்.
அவரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கி வகையைச் சேர்ந்தது என்பதை அவர் அறிந்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணித்த போது அவர்கள் போலியானவர்கள் என்பதும், போலி காவல் நிலையத்தை அவர்கள் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 16 ஆம் தேதியன்று போலி காவல் நிலையத்திற்குள் அதிரடியாக நுழைந்த 10 க்கும் மேற்பட்ட காவல்துறையினர், போலீஸ் உடையில் இருந்த ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், போலி முத்திரைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.