பறவைகளின் சத்தம் மனிதர்களிடையே பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றை போக்கி அமைதியையும், நிம்மதியையும் தருவதாக ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய கால கட்டாத்தில் மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், மன அழுத்தம் அதிகமானால் மன நோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேலை, பொருளாதாரம், குடும்பம், நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அனைவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
ஒரு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சமுதாயம் உருவாக மக்கள் மனங்களில் நிம்மதியும் சமாதானமும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த பரவாலன பிரச்னைகள் தனி மனிதர்களை மட்டுமல்லாமல் சமூகமாகவும் நம்மைப் பாதிக்கிறது. இந்த பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு சுலபமான ஆயுதம் பறவைகளின் ஒலி என ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பிரச்னைகளுக்கான காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்திருக்கின்றனர்.
ஆய்வாளர்கள் குழு 295 உறுப்பினர்களில் மேற்கொண்ட சோதனையில் நகரங்களில் இருக்கும் இரைச்சல், போக்குவரத்து நெரிசலில் எழும் சத்தம் போன்றவை நம் மனதை வெகுவாக பாதிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு போக்குவரத்து இரைச்சல் கொஞ்ச சத்தத்திலும் அதிக சத்தத்திலும் போடப்பட்டது. அடுத்த பறவைகளின் ஒலி இரண்டு அளவுகளிலும் போடப்பட்டது. இந்த சத்தங்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மன ரெஸ்பான்ஸைப் பொறுத்து ஆய்வின் முடிவுகள் அமைந்துள்ளன.
ஆய்வின் முடிவுகள் பறவைகளின் ஒலியானது நமக்கு அமைதியும் நிம்மதியும் தருவதுடன் மன நலத்தையும் பாதுகாப்பதாக கூறுகின்றன.குறிப்பாக காலை எழுந்தவுடன் பறவைகளின் சத்தைத்தை கேட்பது நமக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தும். பதற்றத்திலிருந்து வெளிவரவும் பறவைகளின் ஒலி நமக்கு உதவுகிறது. 2050ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 70% பேர் நகரத்தில் வசிப்பார்கள் என்கிறது நியூஸ்வீக் தளம். அதே வேளையில் பறவைகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.