‘நீட் ரகசியத்தை மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் உடனடியாக சொல்ல வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”விழுப்புரத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளர். இந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மாணவியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன். நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என அல்லும் பகலுமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இன்று வரை திமுக, அந்த நீட் ரகசியத்தை சொல்லவில்லை. அந்த ரகசியத்தை சொல்லாமல் வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நீட் தேர்வு ரத்து தொடர்பான ரகசியத்தை தந்தை ஸ்டாலினும், மகன் உதயநிதி ஸ்டாலினும் உடனடியாக சொல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.