ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11 வயது பழங்குடியின மாணவி ஒருவர் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து வீட்டில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.
எனவே, பயத்தில் மாணவி இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. ஆனால், அந்த சிறுமிக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமிடம் விசாரித்துள்ளனர். பிறகு மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் குண்டேய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.