தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மார்ச் 17ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 20) சட்டப்பேரவை விதிகளை மீறி பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் நடந்து கொள்கிறார். தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி சபாநாயகர் இருக்கைக்கு வந்து மிரட்டுவதாக சபாநாயகர் அப்பாவு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், வேல்முருகன் ஒருமையில் பேசுவதையும், அமைச்சர்களை கை நீட்டி பேசுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அவர் கூறுகையில், எம்.எல்.ஏ வேல்முருகன் பேச்சு அதிக பிரசங்கிதனமாக உள்ளது. விதிகளை மீறி சபாநாயகர் இருக்கை அருகே வரக்கூடாது எனக்கூறியும் வேல்முருகன் கேட்கவில்லை. தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில் வேல் முருகன் மீது நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வேல்முருகனை மன்னிப்பதாக அப்பாவு தெரிவித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். ஆனால், சமீபகாலமாக அவரின் செயல்பாடு மீது திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைப்பேன் என கூறியிருந்த நிலையில், நேற்று திமுக – வேல்முருகன் மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால், வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.