கள்ளக்காதல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கூலிப்படை வைத்து கொலை செய்த போலீஸ் ஏட்டு உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியில் மதுரை தென்மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டுச் சென்ற மணிகண்டனை, மர்ம கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படை ஏவி மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு கூறுகையில், மணிகண்டனின் நகைக்கடைக்கு சில மாதங்களுக்கு முன், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபு தனது மனைவியுடன் சென்று நகை வாங்கி உள்ளார். அப்போது, ஹரிஹரபாபுவின் மனைவிக்கும் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஹரிஹரபாபு வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது மனைவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார் மணிகண்டன். இதேபோல, ஒரு நாள் மனைவியுடன் தனிமையில் இருந்ததை பார்த்த ஏட்டு ஆத்திரமடைந்து கூலிப்படையை ஏவி மணிகண்டனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.