திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள பெரிய குடும்ப தெரு பகுதியைச் சேர்ந்தவர் பவானி சங்கர். இவரது மனைவி கமலா. இந்த தம்பதிக்கு 57 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் பவானி சங்கர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். அவர்களுக்கு பாலாஜி பேபி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பவானிசங்கருக்கு இந்திராணி மற்றும் அவருடைய மகன் பாலாஜி இருவர் மட்டுமே வாரிசு என்று வருவாய் துறையிடம் பொய்யான வாரிசு சான்றிதழ் தயார் செய்து பவானி சங்கர் பேரில் இருந்த 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை இந்திராணி மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயருக்கு வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து பட்டா, சிட்டா ஆகியவற்றை பெற்று கொண்டனர்.
இதற்கு ராம்கி, ராஜேந்திரன் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்து போட்டுள்ளனர். இது குறித்து பத்திரப்பதிவு தடை செய்ய வேண்டும் என்று கமலா தடை மனுவை சார்பதிவாளர் அலுவலகத்தில் அளித்துள்ளார். இதனை சார்பதிவாளர் கார்த்திகேயன் ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில், போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி நீதிமன்றத்தில் கமலா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய குற்றவியல் நீதித்துறை நடுவர், போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, பாலாஜி, வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி, துணை தாசில்தார் ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கார்த்திகேயன், பொய்யான வாரிசு சான்றிதழ் பெற உதவியாக இருந்த மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட நபர்கள் என 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அந்த 13 பேர் மீது வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.