இலங்கை பிலியந்தலை பேருந்து பணிமனையில் நேற்று இரவு அரசு பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு சென்றார். மேலும் சிலர் உணவு வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தி வைத்திருந்த பேருந்து காணாமல் போனதை கண்ட ஓட்டுனர் பிலியந்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கெஸ்பேவ – பிலியந்தலை சந்திப்புக்கு அருகே இருக்கும் சோதனைச் சாவடியில் அந்த பேருந்து செல்வதை கண்ட அதிகாரிகள் பேருந்தை தடுத்து நிறுத்தி தப்பியோட முயன்ற இளைஞரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் செய்த விசாரணையில், தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது காவல்துறையினரிடம் பிடிபட்டதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
நேற்று இரவு 8 மணிக்குப் பின்னர் தனது காதலியைச் சந்திப்பதாக கூறியிருந்ததால், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பேருந்து இயங்கவில்லை என்பதால் பணிமனையில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தை எடுத்துச் சென்றதாக கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.