அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், மக்கள் கூடும் இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதனால் மனிதர்களும் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். இதேபோல் பள்ளிகளுக்குள் புகுந்தும் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இதனால் பள்ளி குழந்தைகளும் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்க நடவடிக்கை தேவை என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒருவர் கோபத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் சான் ஜசிண்டோ நகரைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர், இரவில் துப்பாக்கியால் சுட்டு விளையாடியுள்ளார். இதனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களால் தூங்க முடியவில்லை என தெரிகிறது. இதையடுத்து, ஒரு வீட்டார் எழுந்து துப்பாக்கியால் சுட்டு விளையாடிய நபரை அழைத்துக் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கண்டித்த நபரின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில், அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிச்சென்ற நிலையில், காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.