தேசியக்கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சுதந்திர தின 75-வது அமுத பெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசியக்கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசியக்கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.