தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் பற்றிய கேள்வி எழுப்பி அதன் விலை பற்றி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும். ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும் என தெரிவித்திருந்தார். மேலும், 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன், அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜக தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் இதுகுறித்து இன்று ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால், திமுக அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.