கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 5 பேருக்கும் நிபந்தனைகள் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு ஆக.26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பு, சிபிசிஐடி காவல்துறை தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் விரிவான விவரங்கள், இன்று (ஆக.29) வெளியாகியுள்ளது. அதில், ”பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பெற்றோர்களிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. வேதனையானதும்கூட” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. அதேநேரம் படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது. மேலும், பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர், சிபிசிஐடி அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.