தமிழ்நாட்டில் ’தாலிக்கு தங்கம்’ எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதன்மூலம் ஒரு பவுன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் என்று மாற்றி முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த பெண்களுக்கு உயர் கல்வியை தொடர மாதம் 1,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், தாலிக்கு தங்கம் திட்டம் திருத்தப்பட்டு புதுமைப் பெண் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. இதனால் இனி இந்த திட்டம் செயல்படுத்தப்படாது எனத் தெரிகிறது. எனவே வேறு என்னென்ன திருமண உதவி திட்டங்கள் இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி விரிவான தகவல்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
அதாவது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் நிதி உதவி திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் போன்ற பல திட்டங்கள் அமலில் உள்ளதாகவும் இதன் கீழ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்து பெண்கள் பெறலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.