மும்பை புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த மே மாதம் நடந்த பார்ட்டியில் பெண்கள் ‘குட்டை பாவாடை அணிந்து கொண்டு ஆபாசமாக நடனம் ஆடுவதாக’ காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது பெண்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அவர்களது நடனத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள் மீது போலி ரூபாய் நோட்டுகளை வீசிக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது ஆபாச செயலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ’தனிப்பட்ட போலீஸ் அதிகாரியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர்களின் செயலை ஆபாசம் என்று தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார். எந்த செயல்கள் ஆபாசம் என்று நிர்ணயிப்பதில் அவரின் குறுகிய கண்ணோட்டத்தை இது காட்டுகிறது. இது பிற்போக்கான செயலாகும். இவ்விவகாரத்தில் முற்போக்கான நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறோம்.
இது போன்ற முடிவை எடுக்க போலீஸ் அதிகாரிகளை அனுமதிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு, போலீஸார் ஆபாசமாக கருதும் வகையில் சைகைகள் செய்ததை ஆபாச செயலாக கருத முடியாது. தற்போது இது போன்ற ஆடைகளை அணிவது பொதுவானதாகிவிட்டது. இது போன்ற ஆடைகள் அல்லது நீச்சல் உடைகள், வெளிப்படையான ஆடைகளை அணிவதை அனைவருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இது போன்ற ஆடைகளை திரைப்படங்கள், அழகிப்போட்டிகளில் காணமுடிகிறது” என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை ரத்து செய்தனர்.