கோவிலுக்குள் புகுந்த கொள்ளையன் பீராவை உடைத்து பார்த்து சோர்வடைந்து கோவிலிலேயே படுத்து உறங்கிய சம்பவம் வியாசர்பாடியில் அரங்கேறி உள்ளது.
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் ஆலயம் உள்ளது. இன்று காலை வழக்கம் போல கோவிலின் வெள்ளிப்பக்க கதவை திறந்து பூசாரி உள்ளே சென்றபோது, நெற்றியில் பட்டையுடன் கோவிலுக்கு உள்ளே இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படியே கொஞ்சம் தள்ளி இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு பாதியாக திறக்கப்பட்டிருந்தது. அந்த பீரோவுக்குள் இருந்த பழைய காலண்டர் மற்றும் பழைய காகிதங்கள் வெளியே சிதறிக்கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிறகு, வீடியோ எடுப்பது கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த திருடனை போலீசார் தட்டி எழுப்பினர். தன்னை சுற்றி போலீஸ் நிற்பதை பார்த்து பம்மிய அவர் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார்.
சம்பவத்தன்று இரவு சுவர் ஏறிக்குதித்து கோவிலுக்குள் நுழைந்ததாகவும், பீரோவில் நகையும் பணமும் இருக்கும் என்ற நம்பிக்கையில் சில மணி நேரம் போராடி திறக்க முயன்றதாகவும், முழுவதுமாக திறக்க இயலாத அந்த பீரோவில் பழைய காலண்டர் காகிதங்களும் சில துணிகளும் இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்த அந்த திருடன், பீரோவை திறக்க முயன்று சோர்வடைந்ததால் பீரோவில் இருந்து எடுத்த துணியை விரித்து படுத்து உறங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். நகை, பணம் என எதையும் கொள்ளையடித்துச் செல்லாமல் அங்கேயே படுத்து உறங்கிய காரணத்தால் திருடர் மனநல பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.