காய்ச்சல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இது சாதாரண குளிர் காய்ச்சல் எனவும் திருமாவளவன் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் திருமாவளவன் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அறிவிக்கப்பட்டது. மருத்தவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதேபோல், சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சி என தொடர் பயணம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
மேலும் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை சில தினங்களுக்கு சந்திக்க வர வேண்டாம் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமாவளவன் தற்போது உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். மேலும் மருத்துவர்கள் அவரை ஒய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.