உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நாடும் நாட்டு மக்களும் ஏற்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”உதயநிதி துணை முதல்வராக முடிசூட்டப்பட வேண்டுமா? என்பது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. முதலமைச்சர் அப்படி முடிவெடுத்தால் அதை திமுக ஏற்கும். திமுக ஏற்றால் நாடும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். நானும் ஏற்பேன். நான் திமுகவை ஆதரித்தேன். ஆதரித்துக்கொண்டும் இருக்கிறேன். எனக்கு இந்த பாசிஸ்டுகள் கையில் நாடு சிக்கிவிடக் கூடாது. அதை தடுக்கும் திமுகவின் முடிவுகளுக்கு முகம் தருவதுதான் என்னுடைய பொறுப்பு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”உதயநிதிக்கு துணை முதல்வராகக்கூடிய தகுதி இருக்கிறது என்று திமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். காரணம், உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளரான பிறகு சுமார் 250 பாசறை கூட்டங்களை நடத்தி திமுகவின் லட்சியங்களை வகுப்பெடுக்க ஒரு வாசல் திறந்து வைத்தார். நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு, வயது முதிர்ந்த திமுக தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு உதவினார். கடந்த தேர்தல்களில் திமுக இளைஞரணி செயலாளராக மிகப்பெரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து, ஓர் மிகப்பெரிய வெற்றியை திமுக-வுக்கு ஈட்டித்தந்தார்” என்று தெரிவித்தார்.