இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான மழையால் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிவன்கோயில் அப்படியே புதைந்துவிட்டது.
இடிபாடுகளில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டன. மண் குவியல்களிலும் நிறைய பேர் சிக்கியுள்ளனர். செக்லி பஞ்சாயத்தில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இப்படி இமாச்சலில் நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இமாச்சலில் மண்டியின் ஐஐடி இயக்குநர் லட்சுமிதர் பெஹோரா ஒரு விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதற்கு மாணவர்கள் விழிக்க ஐஐடி இயக்குநரோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என கூறி இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், நீங்கள் விலங்குகளை மாமிசத்திற்காக கொன்றால் இமாச்சலில் கணிசமான அழிவை சந்திக்கும்.
மாமிசத்திற்காக விலங்குகளை அழித்தல் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகும். இது போன்ற நிலச்சரிவுகளும், மேகவெடிப்புகளையும் நீங்கள் மீண்டும் பார்ப்பீர்கள். இந்த பாவத்தின் விளைவுதான் இந்த இயற்கை பேரழிவு” இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.