சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதாக அமெரிக்கா ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், பேரிடர் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மக்கள் மீண்டுவராத நிலையில், சீனா தான் கொரோனா வைரஸ் பரப்பியதாக பலநாடுகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. 2021ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், எப்படி பரவல் துவங்கியது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் எரிசக்தி துறை நடத்திய ஆய்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் உள்ள வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. அதாவது, வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளது என உறுதிபட தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வு பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் மின்சக்தி அமைப்பில் மருத்துவ நிபுணர்கள், புலனாய்வு நிபுணர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வுகானில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று கூறும் புதிய அமெரிக்க அறிக்கையை சீனா மீண்டும் நிராகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவியது அறிவியல் தொடர்பானது. இதை அரசியலாக மாற்றக்கூடாது என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.