ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்பு தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக உருவானது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி நகரத்தை அப்போதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதன்பின்பு அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் கர்னூலை சட்ட தலைநகராகவும் மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 தலைநகரம் என்ற திட்டத்தை அம்மாநில அரசு கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, இனி வரும் நாட்களில் ஆந்திராவின் தலைநகராக மாறும் விசாகப்பட்டினத்துக்கு உங்களை அழைக்கிறேன். மார்ச் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டை அங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.