இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்தது. இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய தெரிவித்திருந்தது. அந்த வகையில், அதற்கான அறிகுறிகள் அனைத்தும் அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்படும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அந்தமான் கடல் பகுதியிலும் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.