இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 20-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒத்திவைத்திருக்கிறது. இருப்பினும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற தாக்குதல்களில், காஸா பகுதியில் 7000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 2,900 பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு கூறிய தகவல்களில் தனக்கு நம்பிக்கையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், ‘இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீனியர்கள் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அங்கு அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதை உறுதியாக நம்புகிறேன். ஒரு போரை நடத்துவதற்கான விலைதான் அது. அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம்’ என்று தெரிவித்தார்.