fbpx

நிர்மலாவை எதிர்த்தால் இதுதான் நடக்கும்!… ஓய்வுபெறுவதற்கு ஒருநாள் முன்பே தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்!

நிர்மலா சீதாராமனை மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கடிதம் எழுதிய ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையராக ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் பொறுப்பு வகித்து வந்தார். அண்மைக் காலங்களில் பாலமுருகன் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை கிளப்பின. இந்தி தெரியாத தனக்கு இந்தி மொழி பிரிவு தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகவும், இது தன் மீதான இந்தி திணிப்பு என்றும் கூறி நேரடி வரிகள் வாரிய ஆணையருக்கு பாலமுருகன் கடந்த 2020ஆம் ஆண்டு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அதே அலுவலகத்தில் வேறு பிரிவிற்கு பாலமுருகன் மாற்றப்பட்டார். தொடர்ந்து சாதிப் பெயருடன் குறிப்பிட்டு சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்த ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு அமலாக்கத் துறையை பாஜகவின் கொள்கை இயக்குனரகமாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். ஜிஎஸ்டி துணை ஆணையரே இவ்வாறான கடிதம் எழுதியது அதிர்வலைகளை கிளப்பியது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அப்போதே கணிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு கேட்டு மத்திய அரசிடம் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் விண்ணப்பித்தார். எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்று பாலமுருகன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஓய்வுகால பலன்கள் நிறுத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்ததன் எதிரொலியாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாலமுருகன் சேலத்திலுள்ள தனது இல்லத்தில் உண்ணாவிரதம் இருந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுபோலவே 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக பாலமுருகன் தனது துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதும், அவரது ராஜினாமா ஏற்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு எம்பி பதவி..? பாஜகவில் ஐக்கியம்..? ஆந்திராவில் பரபரப்பு..!!

Wed Jan 31 , 2024
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாஜகவின் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவி, கடந்த 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் காங்கிரஸ் – தெலுங்குதேசம் என்ற இருதுருவ அரசியல் இருந்த அந்த காலகட்டத்தில், இந்த கட்சி 2009ஆல் நடந்த ஒருங்கிணைந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சிக்கனவுடன் வந்த […]

You May Like