விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இதனால் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், இன்று காலை விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று சிவக்குமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாததற்கு கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து பேசினார் கார்த்தி.
அவர் பேசுகையில், ”கேப்டன் நம்மகூட இல்லங்கிறத ஏத்துக்க முடியல. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மரியாதை செய்ய முடியாதது எனக்கு வாழ்நாள் முழுக்க ஒரு பிழையாகவே இருக்கும். கேப்டன் உடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததில்லை. அவர் போலீசா நடிச்சா அந்த படத்தை தவறாமல் 10 தடவையாச்சும் பார்ப்பேன். நான் நடிகர் சங்கத்துல ஜெயிச்சதுக்கு அப்புறமா கேப்டனை சந்திக்கும்போது அவ்வளவு சந்தோஷமா பேசுனாரு.
ஒரு தலைவன் என்றால் முன் நின்று வழிநடத்த வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை அவரை பார்த்து தான் கற்றுக்கொண்டேன். பெரிய ஆளுமை நம்முடன் இல்லைங்கிறது பெரிய வருத்தமாக இருக்கிறது. அவரை எப்போதும் மிஸ் பண்ணிக்கிட்டே இருப்போம். அவர் எப்போதும் எங்கள் மனதில் இருப்பார். ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டனுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அவருடைய புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும் வகையில் நாங்க செய்ய வேண்டிய விஷயங்களையும் அதில் சொல்வோம். அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார் கார்த்தி.
தொடர்ந்து கார்த்தியின் தந்தை சிவக்குமார் பேசுகையில், ”எம்ஜிஆரைப் போலவே கலை உலகத்திலும், அரசியலிலும் மக்களுடைய பேராதரவை பெற்றவர் அன்பு சகோதரர் விஜயகாந்த். இந்த மண் உள்ள வரை அவரை யாருமே மறக்க முடியாது. வருங்கால முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவர் கேப்டன்” என தளதளத்த குரலோடு விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் சிவக்குமார்.