பறவைகள் வளர்ப்பதில் சிலருக்கு அதீத ஈடுபாடு உண்டு. சிலர் கிளிகளை வளர்ப்பார்கள். சிலர் மாக்காவ் என்று சொல்லக்கூடிய பஞ்சவர்ண கிளிகளை வளர்ப்பார்கள். இவை விலை உயர்ந்தவை என்று கருதுபவர்கள் கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ் வளர்ப்பார்கள். இதெல்லாம் ஒரு ஹாபி. ஆனால், பறவை வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் வெகு நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.
அது என்னவென்றால், பறவை வளர்ப்பில் ஆசை கொள்ளும் முன்பு தங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்பதை ஒருமுறை சோதித்துக் கொள்வது அவசியம். ஏனெனில், பறவை எச்சங்கள் மற்றும் பறவைகளின் தூவிகள் போன்ற மிக மெல்லிய சிறகுகள் காற்றில் பறந்து வந்து நமது சுவாசமண்டலத்தை தாக்க வல்லவை என சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதற்கு உதாரணமாக நடிகை மீனாவின் கணவர் மரணத்தையே நாம் எடுத்துக் கொள்ளலாம். அவரது இறப்புக்கு காரணம் புறாக்களின் எச்சங்களால் பரவிய நுரையீரல் நோய்த்தொற்று என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு புறாக்கள் மூலமாக அவரது 2 நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், புறாவில் இருந்து பரவுவது தொற்று கிடையாது என்றும் அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்றும் தெரிவித்துள்ளனர். எனினும், புறாவின் எச்சத்தை ஒரு சிலரது நுரையீரல் ஏற்றுக்கொள்ளாது என்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பவர்கள் புறா வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது என்றும் எச்சரிக்கின்றனர்.