தரிசனத்திற்கு அனுமதி வழங்காமல் 17 ஆண்டுகளாக பக்தர்களை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது..
சேலம் மாவட்டம், அழகாபுரத்தை சேர்ந்த கே.ஆர்.ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (மேல் சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக (இரு நபர்) ரூ.12,250/- பணம் கட்டிப் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த நபருக்கு தரிசனத்திற்கு 10-07-2020 என்ற தேதி ஒதுக்கப்பட்டு அந்த தேதி ரசீதிலும் குறித்துக் கொடுக்கப்பட்டது.
ஆனால் 2020-ல் கொரோனா உச்சத்தில் இருந்ததால், திருப்பதியில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மேற்படி “மேல் சாத்து வஸ்திர சேவை” என்ற தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பின்னர் அந்த வாய்ப்பு இல்லை என்றும், தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதனால், 17 வருடம் காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்காதது தேவஸ்தானத்தின் சேவை குறைபாடு என்று கூறி ஹரி பாஸ்கர் சேலம் நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம், ஓராண்டுக்குள்் மனுதாரருக்கு “மேல் சாத்து வஸ்திர சேவை” என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும், இல்லை எனில்,ரூ. 45,00,000 நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளது.. சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக இந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது..
மேலும், தரிசனத்திற்காகக் கட்டிய ரூ. 12,250/- தொகையையும் உத்தரவு பிறப்பித்த 2 மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 6% வட்டியுடன் சேர்த்துத் தரவேண்டும் என்றும் சேலம் நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவிட்டுள்ளது..