தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரம் அரசுப் பேருந்துகள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “மாநகரப் போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு, ஒரு பேருந்துக்கு ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து, மொத்தம் 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் கோட்டத்துக்கு 180 புதிய பேருந்துகள், சேலம் கோட்டத்துக்கு 100 புதிய பேருந்துகள், கோவை கோட்டத்துக்கு 120 புதிய பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன.
மேலும் கும்பகோணம் கோட்டத்துக்கு 250 புதிய பேருந்துகள், மதுரை கோட்டத்துக்கு 220 புதிய பேருந்துகள், நெல்லை கோட்டத்துக்கு 130 புதிய பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க, 1,000 புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.