டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. அதன்படி, இதன் இறுதிப் போட்டி திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் 57 ரன்கள் சேர்த்தார். இதில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆதிக் உர் ரஹ்மான் 50 ரன்கள், முகிலேஷ் 51 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஸ்ரீ நெரஞ்சன் டக் அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 1 ரன்னிலும், தொடக்க வீரர் அருண் கார்த்திக் 27 ரன்னிலும், நிதிஷ் ராஜகோபால் 13 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நெல்லை ராயல் கிங்ஸ் 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால், 104 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 2வது முறையாக லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற லைகா கிங்ஸ் அணிக்கு ரூ.50 லட்சமும், 2ஆவது இடம் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.