டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2, 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் சார்பில் கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 10 மாதம் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.
இதனால் தேர்வெழுதிய தேர்வர்கள் கவலையில் உள்ளனர். தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், தாமதத்திற்காக காரணம் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும்’ அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இன்னும் ஒரு வார காலத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.