டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்காக 10,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. சரியாக 8 மாதங்களுக்குப் பிறகு 2023 மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு இன்னும் நடத்தப்படாத நிலையில், தேர்வர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், விரைந்து கலந்தாய்வை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “2022ஆம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் குரூப்-4 காலிப்பணியிடங்களுக்காக, நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023இல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்நிலையில், குரூப் -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25,000 ஆக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
எனவே, 2022ஆம் ஆண்டு தொகுதி-4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். TNPSC குரூப் -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள். ஆகவே விரைந்து குரூப் 4க்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.