தக்காளி விலை உயர்வால், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிய விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகே போடிமல்லாடினா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தக்காளி விவசாயி ராஜசேகர். இவர், 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ள நிலையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு விவசாயி ராஜசேகர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். வாயில் துணி வைத்து அடைத்து கை, கால்கள் கட்டப்பட்டு, தலை சிதைக்கப்பட்ட நிலையில், மதனப்பள்ளி புறநகர் பகுதியில் சாலையோரம் விவசாயி ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 30 லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ததற்கான ரசீது சம்பவ இடத்தில் கிடந்தது காவல்துறையினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்காளிக்கான பணத்தை வாங்கி வந்தபோது யாரேனும் பின்தொடர்ந்து சென்று கொலை செய்தார்களா..? அல்லது, விவசாயி ராஜசேகருக்கு பணம் கொடுக்க வேண்டிய மொத்த வியாபாரிகளின் சதிச்செயலா..? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராஜசேகரிடம் தக்காளி வாங்கிய வியாபாரிகளிடம் விசாரணை நடத்த ஆந்திர காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தக்காளி விலை உயர்வால் அமோக லாபத்தைப் பார்த்த விவசாயி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.