இந்தியாவில் காய்கறிகளின் விலைகள் அவ்வப்போது உயர்வதும், குறைவதும் வாடிக்கையாக உள்ளன. அந்த வகையில், அடிக்கடி வெங்காயத்தின் விலை என்பது உயர்ந்து பொதுமக்களை சிரமப்படுத்தும். மற்ற காய்கறிகளின் விலைகள் எப்போதாவது தான் உச்சம் தொட்டு பிரச்சனையை கிளப்பும். அந்தவகையில் தான் தற்போது தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்த நிலையில், மற்ற மாநிலங்களில் தக்காளி விலை ரூ.200-ஐ கூட தொட்டது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டுகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை தக்காளி விற்பனையாகும் நிலையில், ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய தக்காளி விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இது நேற்று ரூ.20 குறைந்து ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ரூ.10 அதிகரித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் தக்காளி வரத்து குறைந்தது தான் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து அதிகளவில் லாரிகளில் தக்காளி வரும். ஆனால், இன்றைய தினம் இருமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது வழக்கமாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து 80 லாரிகளில் தக்காளி வருமாம். ஆனால், இன்றைய தினம் 25 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது. இதனால் தக்காளியின் விலை என்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.