பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனாரை ஆண் நண்பர்கள் உதவியுடன் கொடூரமாக கொலை செய்த பெண்ணை, கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
தெலங்கானா மாநிலம் சிக்னல் தாண்டா கிராமத்தில் பெண் ஒருவர், தனது கணவரை இழந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த நிலையில் அப்பெண்ணுக்கு வேறு சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக் காதலனுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் அக்கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனை அறிந்த கணவரின் சகோதரர் ராஜூவும் அந்த பெண்ணை, தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ராஜூவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால், அவரை கொலை செய்த அப்பெண் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜூவை ஆற்றங்கரைக்கு வரவழைத்த அந்த பெண், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ராஜூவை அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை தூக்கி ஆற்றங்கரையில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, ஆற்றில் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள், ராஜூவின் சடலத்தை மீட்டனர். அப்போது அவரது சகோதரர் மனைவி தான் கொலை செய்தார் என்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது. அப்பெண்ணை பிடித்து கேட்ட போது, அவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.