பயணிகள் உடனான மோதலின் எதிரொலியாக ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிகள், டிக்கெட் பரிசோதகர்கள் இடையேயான மோதல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் கூட ஓடும் ரயிலில் பெண் பயணியிடம், டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், சில பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாக டிக்கெட் பரிசோதகர்களும் புகார் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வருவதால், அவற்றின் உண்மைத்தன்மை அறிவதற்காக, டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில், மத்திய ரயில்வேயில் சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 50 பிரத்யேக பாடி கேமராக்களை வாங்கி, மும்பை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல்கட்ட வெற்றியை பொறுத்து, நாடு முழுவதும் இதே முறை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமராவின் விலை ரூ.9 ஆயிரம் ஆகும். அதில், 20 மணி நேரத்துக்கு நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், ஏதேனும் புகார் வந்தால் யார் மீது தவறு என்று வீடியோ காட்சியை போட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும், தேவையின்றி பெயர் கெட்டுப்போவது தவிர்க்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.