டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இருவருமே இந்த வழக்கில் இருந்து விலகினர். இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஆனால், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக, டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை, வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், இந்த டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென மனுதாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, வரும் திங்கட்கிழமை வழக்கை பட்டியலிட ஒப்புதல் வழங்கியுள்ளார்.