தமிழ்நாட்டில் 6.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. சுங்க கட்டணம், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை, 3ஆம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் போன்றவற்றின் விலை உயர்வால், நாளுக்கு நாள் லாரி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், லாரிகளுக்கு பசுமை வரி 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு 3,596 ரூபாயிலிருந்து, 4,550 ரூபாயாகவும், 10 சக்கர லாரிகளுக்கு 4,959 ரூபாயிலிருந்து 7,059 ரூபாயாக ஆகவும், 12 சக்கர லாரிகளுக்கு 6,373 ரூபாயிலிருந்து 9,170 ரூபாயாகவும், 14 சக்கர லாரிகளுக்கு 7,787 ரூபாயிலிருந்து 11,290 ஆகவும், 16 சக்கர லாரிகளுக்கு 4,200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 9ஆம் தேதி ஒரு நாள், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது எனவும், இந்த வேலைநிறுத்தத்தில் 6.50 லட்சம் லாரிகள் அன்று ஒருநாள் மட்டும் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.