கடந்த 2017 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது.
இந்த நிலையில் தான், இந்த கொடநாடு வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
இதற்கு டிடிவியும் ஆதரவு தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், தேனியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து பங்கேற்றனர். அப்போது கொடநாடு வழக்கில் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்ததுடன் தமிழக அரசு தெரிவித்த வாக்குறுதி என்னாச்சு என்று முழக்கங்களும் எழுப்பப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய டிடிவி தினகரன் ஓபிஎஸ்-க்கும், தனக்கும் பதவியின் மீது ஆசை இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து. பேசிய பன்னீர்செல்வம் கோடநாடு வழக்கில் இனி வரும் காலங்களிலும் தாமதம் செய்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.