அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் உடன் போதை மாத்திரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துரையில் 2 பேர் சடலமாக கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பாலகுறு மற்றும் சவுந்தரராஜ் என்பதும், அவர்கள் இருவரும் ஒன்றாக கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. நேற்றிரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மேலும், சடலத்திற்கு அருகே மதுபாட்டில்களும் சானிடைசர் பாட்டில்களும் கிடந்துள்ளன.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது போலி மதுபானம் எதாவது குடித்து உயிரிழந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.