தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய கருத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இதனைக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த மதத்தையும் தவறாகப் பேசக் கூடாது என்றும் சனாதன தர்மத்தை யாராவது தவறாகப் பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தியா – பாரதம் சர்ச்சை குறித்து அங்கீகரிக்கப்பட்ட நபர்களே பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உதயநிதி தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருப்பதாவும் பலமுறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே சனாதனம் குறித்த பேச்சுக்காக டெல்லி, பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 260-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.