ஒடிசா மாநிலம் சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ளூர் நபர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டி ஒன்றை விளையாடியுள்ளனர். ஜாலியாக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரவுட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக இருந்துள்ளார். போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் ‘நோ பால்’ வீசியதாக சைகை காட்டினார். ஆனால், அது நோ பால் இல்லை என பந்துவீச்சாளரும் பீல்டிங்கில் இருந்த அணியின் வீரர்களும் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
பீல்டிங் அணியில் இருந்த வீரர்கள் பேட் மட்டையை எடுத்து தாக்க தொடங்கினர். அப்போது ஸ்முதிரஞ்சன் ராவத் என்ற நபர் நடுவர் லக்கியை கத்தியால் குத்தியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன அங்கிருந்த மற்றவர்கள், நடுவராக இருந்த லக்கியை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உள்ளூர் மக்கள் திரண்டு பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், லக்கியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.