தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்தவர்கள். முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு படித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் எல்லோரும் தகுதி வாய்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில், எழுத, படிக்கத் தெரிந்தவர் முதல் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பட்டப்படிப்பு உள்ளிட்ட வகுப்புகளின் தேர்ச்சி பெற்று பதிவு செய்து ஜூன் மாதம் 30 ஆம் தேதியோடு ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியானவர்கள் ஆவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 45 வயதிற்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் 72,000 மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகுதிகளை உடையவர்களுக்கு தமிழக அரசால் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 3 வருடங்கள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவி தொகை வழங்க முடியாது.
தகுதியான பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தை தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.