முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களைப் பொறியாளர்கள் முன்கூட்டியே மின் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்ய மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மின்சார தடை பிரச்சனை ஏற்படும் இடத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மின் தடை ஏற்பட்ட நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.